Tuesday, April 7, 2009

தமிழ்த் தாய்க்கு நேர்த்திக்கடன்

பக்தி மிகுந்தநம் மக்கள் செய்யும் நேர்த்திக்கடன்:
தீ மிதிப்பது,அலகு குத்திக்கொள்வது,கற்பூரம் காட்டுவது
முடிமழிப்பது,புழுதியில் அங்கம்புரள்வது,என பலவகை,

ஆனால்,தமிழ்த்தாய்க்கு சிலர்மட்டுமே செய்யும் நேர்த்திக்கடன்:


கரியாகும் நெருப்பல்ல கடப்பாரை அலகல்ல
கற்பூரச் சுடரல்ல முடியல்ல-தமிழ்த்தாய்
அரியா சனத்தாள்க்கே அதுநேர்த்திக் கடனல்ல
அவள்கோபம் தணிக்கின்ற செயலல்ல!

நூற்றாண்டி ருபத்தொன்றில் நுழைவுற்றும் பலகற்றும்
நோக்கத்தில் பழுதென்றால் அதைமாற்று,-கொள்கை
ஆற்றாத செயலெல்லாம் அசதிக்கொண் டுறங்கிற்றே,
அடிமைக்குள் புதையாதே தலைதூக்கு.

புரண்டங்கம் புழுதிக்குள் திருக்கோவில் வலம்வந்து
புரியாத மொழிபாடும் வழிபாட்டில்-திகைப்பில்
அரண்டங்கு நடுக்குற்றும் அருள்வந்து மலையேற்றும்
திருநீற்றை அடிக்காதே தமிழ்த்தாய்க்கே.

அறிவோற்றும் திருநாட்டில் அடைமானம் குலமானம்
ஐயயோ!என கேட்கும் குரல்ஈனம்.-நம்மைப்
பொறிவைத்து பிடிப்பானைப் பொறிக்குள்ளே புகுத்திப்பின்
புகழுக்குள் புகுத்திக்கொள் அது மானம்.

குலத்துக்காம் புகழொன்றே திருநேர்த்திக் கடனாகும்
குடிமைக்கும் அதுகாப்பு வீறாப்பு-வாழும்
புலத்திற்குள் மொழித்தெய்வம் குடிவாழும் இலையென்றால்
புலனற்ற பிண்டத்தின் நிலமாகும்.


நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.

No comments:

Post a Comment