Thursday, April 9, 2009

கம்ப சித்திரம்

கம்பன் கவிதையில் சொல்விளையாட்டும்
பொருள்விளையாட்டும் அளவிடவியலாதவை.
அவற்றில் நான் சுவைத்தவை சில:

ஆற்றுப் படலத்தில் வெள்ளத்தின் தீவிரத்தை
அரண்மனைக் கொட்டிலில் கட்டப்பட்ட யானைக்கு
உவமையாக்கும் அழகியலை ராமாயணத்தில் காணலாம்.

கதவினை முட்டி,மள்ளர் கையெடுத் தார்ப்ப எய்தி,
நுதலணி ஓடை பொங்க,நுகர்வரி வண்டு கிண்ட,
ததைமணி சிந்த உந்தி,தறியிற தடக்கை சாய்த்து,
மதமழை யானை என்ன,மருதம்சென் றடைந்த தன்றே!

பொருள்:

யானை,கொட்டிலின் கதவை முட்டி,போர் வீரர்கள்
கைகளைத் தூக்கி ஆரவாரம் செய்ய, நெற்றியில்
முகபடாம் ஆடும்படி கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு
யானையின் மதநீரை வண்டுகள் சூழ்ந்து மொய்க்க
கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலி செய்ய,கட்டுத்தறியையும்
அறுத்துக்கொண்டோடுவதுபோலும்:

வெள்ளம்,அணைக்கட்டின் கதவை முட்டி,மதகின் தண்ணீர்
திறந்து விடும் தறி என்னும் குதிரை மரம் இற்று விழும்படி
செய்து,உழவர்கள்,அச்சமுற்று கைகளைத் தூக்கி ஆரவாரம்
செய்ய, ஆற்றுக்கு முன்பக்கமுள்ள ஓடை போன்றுள்ள
சிறு நீர்நிலையும் பொங்கிவழியும்படி அடித்துச்செல்லப்படும்
மலையில்,மரக்கிளையில் சூழ்ந்த வண்டுகள் ஆரவாரம்
செய்ய,பொன்னையும் மணியையும் அடித்துச் செல்லும்
வெள்ளம், வயல்களைச் சென்றடைந்தது.

ஒருசொல் இருபொருள்:

கதவு=யானைக்கொட்டிலின்கதவு,மதகின்கதவு.
மள்ளர்=போர்வீரர்,உழவர்.
நுதல் அணி ஓடை=யானையின் முகபடாம்,
சிறிய நீர்நிலை.
யானையின் மதநீரில் மொய்க்கும் வண்டு,தேனடையில்
மொய்க்கும் வண்டு.
மணி=யாணையின்மணி,நவ ரத்தின மணி.
தறி=கட்டுதறி,குதிரைமரம்.
கை=தும்பிக்கை,அலைகளாகிய கை.
பருப்பொருள்-யானைசெய்யும் செயலை வெள்ளம் செய்தது.

------------------------------------------

No comments:

Post a Comment